கேரளா: ரெட் அலர்ட் எதிரொலியாக கேரளாவில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி உள்ளது.
கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்கள் பலத்தமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி இன்று அனைத்து மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு இன்று “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் வருகிற 26-ந்தேதி 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கனமழை தொடர்ந்து பல நாட்கள் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் அங்கு நிலச்சரிவு, பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அங்குள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, பல இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள எடக்கல் குகைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. குருவா, காந்தன்பாரா, பூக்கோடு உள்ளிட்ட இடங்களில் படகு சவாரி நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இடுக்கியில் உள்ள நீர்நிலைகளில் நீர் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மலையேற்றம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் இரவு நேர பயணத்துக்கு தடை போடப்பட்டு இருக்கிறது.