ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதற்கு முன் டாடா குழுமம், உயிரிழந்தவர்களுக்கு தலா 1 கோடி நிவாரணம் அளிக்கப்படுமென தெரிவித்திருந்தது. இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் உடனடி நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். இந்த தொகை, டாடா குழுமம் அறிவித்த 1 கோடி நிவாரணத்துடன் இணைந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளும் வழங்கப்படும் என்றார்.
மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை ஏர் இந்தியா ஏற்கும் என்றும், மீட்புப் பணிக்கு 100 பராமரிப்பாளர்கள் மற்றும் 40 பொறியாளர்கள் ஆமதாபாத் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்காக நிறுவனம் எப்போதும் துணையாக இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இந்த சூழ்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவருக்கு கடிதம் எழுதி, உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்குமாறு கேட்டுள்ளது. அவர்களின் மருத்துவச் செலவுகளையும் ஏற்குமாறு கேட்டுள்ளது. இந்த விபத்து பலரது வாழ்க்கையில் மறக்க முடியாத சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உதவிகள் சீராக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.