புது டெல்லி: பாகிஸ்தானை ஒட்டியுள்ள மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இன்று நடைபெறவிருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹரியானா அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
‘ஆபரேஷன் ஷீல்ட்’ ஒத்திவைக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைப்பு குறித்து சண்டிகர் நிர்வாகமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஹரியானாவின் 22 மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்திகை நடத்துவதற்கான மாற்று தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நிர்வாகக் காரணங்களால் இந்தப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்.

ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் இந்தப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கியது. இதற்கு முன்னதாக, கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
அப்போது, போர் ஏற்பட்டால் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது வழங்கப்பட்ட பயிற்சிக்குப் பிறகு நடைபெறும் முதல் பாதுகாப்பு ஒத்திகை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இன்னும் மோசமாக உள்ளன.
இந்தச் சூழலில்தான் இன்று மாலை ஜம்மு-காஷ்மீர், குஜராத், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட இருந்தது. கட்டுப்பாட்டு அறை நடவடிக்கைகள், வான்வழித் தாக்குதல் சைரன்கள், தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக் குழுத் திட்டங்கள் அனைத்தும் ஆபத்து காலங்களில் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்தப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட இருந்தது.