திருவனந்தபுரம்: சமூக ஊடகங்களில் இளம்பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறி, பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாங்கூட்டத்தில் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.
சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுக்கப்பட்டதாக மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் புகார் அளித்தார். பின்னர் வேறு சில இளம்பெண்களும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதில் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் மாங்கூட்டத்தில் மீது மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ., கட்சியினரும், அவர் எம்.எல்.ஏ. மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்த அழுத்தத்தின் பின்னர் ராகுல் மாங்கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதுவே சர்ச்சையை அடக்கவில்லை.
இந்நிலையில், அவர்மீது சமூக ஊடகங்களில் பெண்களை பின்தொடர்ந்து துன்புறுத்தியது, மன உளைச்சலை ஏற்படுத்தியது, கருக்கலைப்புக்குத் தூண்டியது, அச்சுறுத்தியது ஆகிய பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு கேரள அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி சிக்கலில் சிக்கி உள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வருவதால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைவரும் கவனமாக காத்திருக்கின்றனர்.