புதுடில்லி: பள்ளி மாணவர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு கல்வி மிகவும் அவசியமானது என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தற்போது ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே பாலியல் கல்வி கற்பிக்கப்படும் நிலையில், அதை அதற்கு முன்பே தொடங்க வேண்டும் என்ற பரிந்துரையை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த மையத்தில் இருந்தார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் அலோக் அராதே அமர்வு, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியதோடு, இந்த வழக்கு வழியாக குழந்தைகளுக்கான பாலியல் கல்வி பற்றியும் முக்கிய கருத்தை பதிவு செய்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில், என்.சி.இ.ஆர்.டி. வழிகாட்டுதலின் படி பாலியல் கல்வி பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது” என்று கூறப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், தற்போது வழங்கப்படும் கல்வி போதுமானதல்ல எனவும், பருவமடையும் வயதில் குழந்தைகள் சந்திக்கும் உடல் மற்றும் மன மாற்றங்களை புரிந்துகொள்ள தேவையான விழிப்புணர்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
நீதிமன்றம் மேலும், “மாணவர்களுக்கு 9ம் வகுப்புக்கு முன்பே பாலியல் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தியது. இது கல்வி துறையில் முக்கிய மாற்றத்துக்கான வழியைக் காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. கல்வியாளர்கள், குழந்தைகள் நல நிபுணர்கள் மற்றும் பெற்றோர் அமைப்புகள் இந்த கருத்தை பெரிதும் பாராட்டி வருகின்றன.
#