பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த ராமமூர்த்தி கவுடா என்ற சமூக ஆர்வலர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை அனுப்பினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 2015-ல், சுரங்கத்திற்கான நிலத்தை குத்தகை மற்றும் புதுப்பித்தலில் முறைகேடுகள் நடந்தன. அப்போது முதல்வராக இருந்த சித்தராமையா இந்த முறைகேடுகளில் நேரடியாக ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
8 சுரங்க நிறுவனங்களுக்கு சுரங்க குத்தகைக்கு ரூ.500 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். இதனால், அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும். ராமமூர்த்தி கவுடா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கருத்து கேட்டுள்ளார். புகாரை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். “சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கவுடாவின் புகாரை விசாரிக்க வேண்டும். கவர்னர் தன்னிடம் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும். ஏழைகளின் பாதுகாவலர் என கூறும் சித்தராமையா இந்த முறைகேடு குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என பா.ஜ.க., எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா கூறினார்.