தென்னாப்பிரிக்காவின் போட்ஸ்வானாவிலிருந்து 8 சிவிங்கிப்புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதில், முதல் கட்டமாக 4 சிவிங்கிப்புலிகள் மே மாதத்தில் இந்தியா வந்து சேர உள்ளன.

2022 செப்டம்பரில் மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவுக்கு 8 சிவிங்கிப்புலிகள் – 5 பெண், 3 ஆண் – கொண்டு வரப்பட்டனர். பின்னர், 2023 பிப்ரவரியில் மேலும் 12 சிவிங்கிப்புலிகள் சேர்க்கப்பட்டனர்.
தற்போது, பூங்காவில் இந்தியாவில் பிறந்த 14 குட்டிகள் உட்பட மொத்தம் 26 சிவிங்கிப்புலிகள் உள்ளனர்.இந்த நிலையில், போட்ஸ்வானாவிலிருந்து 8 புதிய சிவிங்கிப்புலிகள் இரு கட்டங்களில் கொண்டு வரப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும், கென்யா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் இன்னும் அதிகமான சிவிங்கிப்புலிகளை இந்தியா கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது இந்தியா மற்றும் கென்யா இடையே ஒப்பந்தம் தயாராகி வருகிறது. இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உயிரி வேற்றுமை பாதுகாப்பை வலுப்படுத்தவும் செய்யப்படும் முக்கிய முயற்சியாகும்.