தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்ச்சியாக நடைபெறுவதால், இந்திய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி 2ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுடன், பிப்ரவரி 3ஆம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27 நாட்களில், 5 வெவ்வேறு சம்பவங்களில் 63 தமிழக மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கை காவலில் போயுள்ளன. 2024ஆம் ஆண்டு மட்டும் 36 சம்பவங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் இலங்கையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது, 97 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில், 216 மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகள் மீனவ சமுதாயத்துக்கு பொருளாதாரத்திலும் வாழ்வாதாரத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண, மீனவர்களை கைது செய்வதை நிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும், இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார்.