புதுச்சேரி: ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை சதுக்கத்தில் நேற்று முன்னோட்ட யோகா தின விழா நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். லெப்டினன்ட் கவர்னர் கைலாஷ்நாதன் யோகா பயிற்சியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
யோகா என்பது உடலையும் மனதையும் பாதுகாக்கும் ஒரு பாரம்பரிய கலை. இது சர்வதேச அளவில் பிரதமர் மோடியால் செயல்படுத்தப்பட்டது. நாட்டில் கொரோனா பரவலை மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருப்பினும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. மத்திய அரசும் அதை அறிவுறுத்தவில்லை. கொரோனா பரவலுக்கு ஏற்ப முகக்கவசம் அணிவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், “யோகா கலை என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒன்றிணைக்கிறது. யோகா செய்தால் அமைதி, தூய்மை, சக்தி மற்றும் வலிமை கிடைக்கும். யோகா மன அழுத்தத்திற்கு சரியான தீர்வாகும். மருந்து இல்லாமல் இயற்கையான முறையில் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ யோகா உதவும்” என்றார்.
தொடர்ந்து, லெப்டினன்ட் கவர்னர் கைலாஷ்நாதன், மத்திய இணையமைச்சர் பிரதாப் யாதவ், சட்டமன்ற சபாநாயகர் செல்வம், தலைமைச் செயலாளர் சரத் சவுகான் மற்றும் பலர் காந்தி சிலை முன் தரையில் அமர்ந்து யோகா பயிற்சி செய்தனர். இதில் குழந்தைகள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் முதியவர்கள் பங்கேற்றனர். விழாவின் முடிவில், அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.