புதுடில்லி: மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக ஏற்கனவே நீதிமன்றத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும், இப்போது அந்தத் தவறை மீண்டும் செய்ய விரும்பவில்லை எனவும் அவர்கள் கூறினர்.
மேற்குவங்கத்தில் வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. அந்த வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கையுடன் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் விசாரித்தனர். மனுவின் இயல்பு குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், “ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்க நாங்கள் விரும்புகிறோம் என நீங்கள் கருதுகிறீர்களா? இது நீதித்துறையின் வரம்புகளை மீறுகிறது” என்று கருத்துத் தெரிவித்தனர்.
இதேவேளை, மசோதாக்கள் மீது ஜனாதிபதி திரவுபதி முர்மு முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பாஜக எம்.பிக்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.