ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் சுற்றுலாதளத்தில் நான்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி நடவடிக்கையாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தானில் இயங்கிய 9 தீவிரவாத முகாம்களை முற்றிலும் அழித்தது.

இந்த தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் மீது விமான தாக்குதல்களை நடத்த முயற்சித்தது. ஆனால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதனை முற்றிலும் தோற்கடித்து, எந்தவொரு சேதத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாத்தன.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், அமெரிக்காவின் தலையீட்டின் பின்னர், இரு நாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து அரசியல் மற்றும் நீர்மூல ஒப்பந்தங்களின் மூலமாக பல நடவடிக்கைகள் எடுத்தது. முக்கியமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு, பதிலாக பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதனிடையே, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த துருக்கி நாட்டின் பொருட்கள், சுற்றுலா உள்ளிட்டவை இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்டன. இந்நிலையில், ‘பாக்’ எனும் சொல் இந்திய சமூகத்தில் எதிர்மறை உணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், இனிப்புகளின் பெயர்களிலிருந்தும் அது அகற்றப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில் உள்ள பல இனிப்பகங்கள், ‘பாக்’ எனும் பதம் கொண்ட இனிப்புகளின் பெயர்களை மாற்றத் தொடங்கியுள்ளன. இனிப்புகளின் பெயர்களில் ‘பாக்’ என்ற பதம் தவிர்க்கப்பட்டு, அதன் பதிலாக ‘ஸ்ரீ’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கிணங்க, மைசூர் பாக் இனி “மைசூர் ஸ்ரீ”, மோத்தி பாக் இனி “மோத்தி ஸ்ரீ”, ஆம் பாக் இனி “ஆம் ஸ்ரீ”, கோந்த் பாக் இனி “கோந்த் ஸ்ரீ” என மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் கடைகளிலும் பொருட்களின் பெயர்களிலும் நடைமுறைக்கு வர தொடங்கியுள்ளதோடு, சமூக வலைதளங்களில் இது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இது ஒரு இனிப்பு பெயர் மாற்றமாக இல்லாமல், தேசிய உணர்வின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.