ஐதராபாத்: தெலுங்கு சினிமா நடிகரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான போசானி கிருஷ்ண முரளி, ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவரது சமூகத்தினர் குறித்து சில வாரங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். போசானி கிருஷ்ண முரளியின் கருத்துக்கு எதிர்ப்புகளும் எழுந்தன.
இதையடுத்து அவர் மீது ஓபுலவாரிப்பள்ளி போலீஸார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். போசானி கிருஷ்ண முரளி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநில சிறப்பு போலீசார் போசானி கிருஷ்ண முரளியை அவரது ஐதராபாத் வீட்டில் இருந்து நேற்று இரவு கைது செய்தனர். முன்னதாக, அவரைக் கைது செய்ய போலீஸார் அவரது வீட்டுக்கு வந்தபோது, தனக்கு உடல்நலக் குறைவு இருப்பதாகவும், கைது செய்வதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆனால் போலீசார் அதை ஏற்கவில்லை. வாக்குவாதம் தொடர்ந்ததால், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு போசானி கிருஷ்ண முரளியை போலீசார் கேட்டுக் கொண்டனர். பின்னர், அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. போசானி கிருஷ்ண முரளி மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.