ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை இந்திய ராணுவம் தேடி கண்டுபிடித்து தாக்கி அழித்ததுடன், அங்கிருந்து 5 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்தியவர்கள் தற்போது தெற்கு காஷ்மீரில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீசாரும் இந்திய ராணுவத்தினரும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலை பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் 5 வெடிகுண்டுகள், 2 ரேடியோ செட்கள் மற்றும் 3 போர்வைகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், சில மணி நேரங்களில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய ராணுவம் உடனே தக்க பதிலடி கொடுத்ததாகவும், கடந்த 11 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தங்களை மீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.