மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் பி.எம்.மித்ரா பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. தமிழ்நாடு, உ.பி., உள்ளிட்ட 7 மாநிலங்களில் இவை அமைக்கப்படுகின்றன. இந்திய ஜவுளி சந்தை 2030-ல் 350 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான இயந்திரங்கள் தேவைப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இயந்திரங்களுடன், அவற்றின் பராமரிப்பு மற்றும் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் தேவையும் இருக்கும். தற்போது, சீனா, தைவான், வியட்நாம், தென் கொரியா மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஜவுளித் துறை தொடர்பான இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த இயந்திரங்களை இறக்குமதி செய்ய ரூ.40,000 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, இந்த இயந்திரங்களை இந்தியாவில் தயாரிக்க உ.பி.யில் ஜவுளி இயந்திர பூங்கா அமைக்கப்படுகிறது. இது கான்பூரில் உள்ள போக்னிபூர் அருகே சப்பர்கட்டா என்ற கிராமத்தில் 875 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்த பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள 35 நிறுவனங்களுடன் உ.பி அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உள்நாட்டு தேவைக்கு கூடுதலாக, 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் அதன் உபகரணங்களும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. தவிர பி.எம். உ.பி., மாநிலம் லக்னோவில் மித்ரா பூங்கா அமைக்கப்படும், மேலும் 10 தொழில் பூங்காக்களை அம்மாநில அரசு அமைக்க உள்ளது. அவற்றில் ஒன்றாக இருக்கும் இந்த ஜவுளி இயந்திர பூங்கா, சுமார் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.