புது டெல்லி: திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாகக் கூறியுள்ளனர்.
பாஜக, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களை உள்ளடக்கிய திபெத்துக்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற அமைப்பு, இந்த மாதம் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றியது.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் பிஜு ஜனதா தள மாநிலங்களவை எம்.பி.யுமான சுஜீத் குமார் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான பரிந்துரையை ஆதரிக்கும் கையெழுத்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
“திபெத்திய மக்களின் நலனுக்கான வலுவான ஆதரவின் வெளிப்பாடாக, ஜூலை 6 அன்று தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடிய தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான கையெழுத்து பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்” என்று சுஜீத் குமார் கூறினார்.