
புதுடில்லி: கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், அதில் ‘நிம்பஸ்’ என்ற புதிய வகை வைரஸ் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொண்டையில் கடும் வலியை உருவாக்கி, பிளேடால் கிழித்ததைப் போல் உணர வைக்கும் என்ற செய்தி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வைரஸ் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வகையைச் சேர்ந்தது என்றும், ‘என்.பி.1.8.1’ என்ற குறியீட்டில் உலக சுகாதார அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது.

2019ல் சீனாவில் தோன்றி உலகையே உலுக்கிய கொரோனா, சில ஆண்டுகள் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது, புதிய வடிவங்களில் பரவி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இந்த நிம்பஸ் வைரஸ் வேகமாக பரவுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா, நியூயார்க், நியூ ஜெர்சி, இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களில் இது கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியா நாடுகளில், குறிப்பாக சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 100க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. எனினும், நிம்பஸ் வகை தொற்று இன்னும் கண்டறியப்படவில்லை. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, இது உயிருக்கு ஆபத்தானதாக இருக்காது. ஆனால், இந்த வகை பக்கவிளைவுகளால் சிலரை கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிம்பஸ் தொற்றின் அறிகுறிகளில் இருமல், காய்ச்சல், சோர்வு, தசைவலி, வாசனை மற்றும் சுவை இழப்பு உள்ளிட்டவை அடங்கும். ஆனால், இந்த வைரசால் சிலருக்கு தொண்டையில் கடும் வலி ஏற்படுகிறது. இதன் தாக்கம் எவ்வளவு தீவிரம் என்பதைத் தீர்மானிக்க இன்னும் மேலும் ஆய்வு தேவைப்படுகிறது. மக்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து, தடுப்பூசி முடிப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.