பாட்னா: பீகாரின் கரகாட் நகரில் பிரதமர் மோடி நேற்று ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியப் பெண்கள் அணியும் காவியின் சக்தியை பாகிஸ்தானும் உலகமும் கண்டிருக்கின்றன. பாகிஸ்தான் ராணுவப் பாதுகாப்பில் இருந்த பயங்கரவாதிகளை நாங்கள் வீழ்த்தினோம். பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்களின் மறைவிடங்களை இந்திய ஆயுதப் படைகள் அழித்துவிட்டன.

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மற்றும் இராணுவ நிறுவல்களையும் நாங்கள் அழித்துள்ளோம். இது புதிய இந்தியா. அதன் சக்தி அனைவருக்கும் தெரியும். ஆபரேஷன் சிந்தூர் என்பது நமது அம்பறாத்தூணியில் இருந்து எய்யப்பட்ட அம்பு. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிவடையவில்லை. அது நிறுத்தப்படவில்லை. பயங்கரவாதம் என்ற விஷப் பாம்பு மீண்டும் தலை தூக்க முயன்றால், அது அதன் குழியிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு நசுக்கப்படும்.
2014-ல் NDA ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 125-ல் இருந்து 18 ஆகக் குறைந்துள்ளது. மாவோயிசம் வேரோடு பிடுங்கப்பட்டு, அமைதி, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் கல்வி ஒவ்வொரு கிராமத்தையும் அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. பீகார் மக்களின் துன்பங்களைப் பற்றி காங்கிரசும் RJDயும் ஒருபோதும் கவலைப்படவில்லை.
இங்குள்ள வறுமையைக் காண விரும்பிய வெளிநாட்டினருக்காக அவர்கள் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்தனர். தங்கள் பாவங்களால் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நம்பிக்கையை இழந்துவிட்டதால், இப்போது அவர்கள் சமூக நீதி அரசியலை கையில் எடுத்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.