பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3 வந்தே பாரத் ரயில் சேவைகளையும், ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா இடையிலான ஓட்டுநர் இல்லா மெட்ரோ சேவையையும் துவக்கி வைத்தார். மஞ்சள் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த மெட்ரோ பாதை, ராஷ்ட்ரீய வித்யாலயா சாலை முதல் ஓசூர் சாலை வரையிலான 18.82 கி.மீ தூரம் கொண்டது. 2016 ஜூன் 16 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டிய இந்த திட்டம், பல தடைகளை எதிர்கொண்டு, திட்ட செலவு 5,056 கோடியிலிருந்து 7,160 கோடி ரூபாயாக உயர்ந்தது.

காலை 11:45 மணிக்கு, ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா மெட்ரோ சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. அதற்கு முன்னர், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், பெங்களூரு – பெலகாவி, அமிர்தசரஸ் – ஸ்ரீமாதா வைஷ்ணோதேவி கத்ரி, அஜ்னி – புனே ஆகிய பாதைகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கத்துக்கு வந்தன. இதில், நாட்டின் 150வது வந்தே பாரத் ரயிலும் அடங்கும்.
பின், பிரதமர் மோடி ராகிகுட்டா முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரை மெட்ரோவில் பயணம் செய்து, மக்களுடன் கலந்துரையாடினார். எலக்ட்ரானிக் சிட்டி IIT ஆடிட்டோரியத்தில், கெம்பாபுரா – ஜே.பி.நகர் 4வது பேஸ் மற்றும் ஹொசஹள்ளி – கடபகெரே மெட்ரோ பாதை பணிகளுக்கு துவக்குவிழா நடைபெற்றது. இந்த 44.65 கி.மீ பாதை, 15,610 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.
ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா மெட்ரோ சேவை துவங்கியதுடன், பெங்களூரு மக்களின் ஒன்பது ஆண்டு காலக் காத்திருப்பு நிறைவேறியது. இதனால், மெட்ரோ தினசரி பயணிகள் எண்ணிக்கை 25 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
#பெங்களூரு, #மெட்ரோசேவை, #வந்தேபாரத், #Bengaluru, #VandeBharat, #MetroRail