டெல்லி: நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்டுகளில் FASTag பயன்பாடு 98 சதவீதம் வரை வந்துவிட்டது. ஆனால் இன்னும் 2 சதவீத வாகன ஓட்டிகள் கையில் பணம் கொடுத்து கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் இருமடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இனி FASTag இல்லாதவர்கள் கையில் பணம் கொடுப்பதை விட, UPI செயலிகள் மூலம் பணம் செலுத்தினால் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. கையில் பணம் கொடுத்தால் 2 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், UPI வழி செலுத்தினால் 1.25 மடங்கு கட்டணமே போதுமானது. இந்த நடைமுறை நவம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது.
உதாரணமாக ஒரு டோல்கேட்டில் கட்டணம் ரூ.100 என்றால், FASTag இருந்தால் ரூ.100 மட்டுமே செலுத்த வேண்டும். கையில் பணம் கொடுத்தால் இருமடங்கு ரூ.200 ஆகும். ஆனால் UPI மூலம் செலுத்தினால் 1.25 மடங்கு கட்டணமாக ரூ.125 மட்டும் செலுத்தினால் போதுமானது. இதனால் வாகன ஓட்டிகள் நேரமும் பணமும் மிச்சப்படுத்திக் கொள்ளலாம்.
மத்திய நெடுஞ்சாலைத்துறை விதிகளில் திருத்தம் செய்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம், FASTag இல்லாதவர்களுக்கு “குட் நியூஸ்” ஆகக் கருதப்படுகிறது. மேலும், டோல்கேட்டுகளில் பணம் கையளிப்பு முறையை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சலுகை அமையும் என அரசு தெரிவித்துள்ளது.