வெளியில் செல்லும் போது வெயிலின் கதிர்வீச்சில் உள்ள UV கதிர்கள் நம் சருமத்தை நேரடியாக தாக்கக்கூடியவை. இது உடனடி பாதிப்புகளை மட்டும் அல்லாமல் நீண்ட காலத்தில் சரும புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம். இதனால் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியமாகிறது. ஆனால் எந்த சன்ஸ்கிரீன் நமக்கு ஏற்றது என்பதையும் அறிந்து பயன்படுத்த வேண்டும்.

தோல் தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. எண்ணெய் கலந்தது, வறண்டது, இயல்பானது, கலவை மற்றும் உணர்திறன் மிக்கது போன்ற பல வகையான சருமங்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே சன்ஸ்கிரீன் பொருத்தமல்ல. உங்களின் சருமத்திற்கேற்ற வகையில் சன்ஸ்கிரீனை தேர்வு செய்தால்தான் அதன் முழு பயனும் கிடைக்கும்.
எண்ணெய் பசை உடைய சருமம், முகப்பருவுக்கு ஆளாகும் அல்லது உணர்திறன் மிகுந்த சருமம் இருப்பவர்கள், கனிம அடிப்படையிலான மற்றும் காமெடோஜெனிக் அல்லாத சன்ஸ்கிரீனை தேர்வு செய்யலாம். சிங்க் ஆக்சைடு மற்றும் டைட்டானியம் டைஆக்சைடு போன்ற பொருட்கள் அடங்கிய சன்ஸ்கிரீன்கள் உணர்திறன் மிக்க சருமத்திற்கு மிகவும் பொருத்தமானவை.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு சேமரிட்கள் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் போன்ற ஈரப்பதம் தரும் அம்சங்கள் உள்ள சன்ஸ்கிரீன்கள் சிறந்த தேர்வாக அமையும். இது சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும்.
கருமையான சருமம் உள்ளவர்கள் பொதுவாக மினரல் சன்ஸ்கிரீனை தவிர்க்கலாம், ஏனெனில் இவை சரியாக தேய்க்கப்படாவிட்டால் வெண்மை படிவத்தை உருவாக்கி முகத்தை சாம்பல் நிறமாக காட்டக்கூடும். இதற்குப் பதிலாக, டின்ட் செய்யப்பட்ட மினரல் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது சிறந்த தேர்வாகும்.
சன்ஸ்கிரீனை வெயில் காலத்தில் மட்டும் அல்லாமல் மழை காலத்திலும் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். சில நேரங்களில் மேகங்கள் UV கதிர்களை பிரதிபலிக்கக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும். எனவே, எப்போதும் வெளியில் செல்லும் முன் சன்ஸ்கிரீன் பூசுவது சரும பாதுகாப்புக்கு முக்கியமான ஒரு நடைமுறையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு உங்கள் தோல் வகைக்கு ஏற்ப சரியான சன்ஸ்கிரீன் தேர்வு செய்தால் UV கதிர்களின் தீவிர தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.