புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் கடந்த 18-ம் தேதி பார்லிமென்ட் வளாகத்தில் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியனை நியமித்து தலைவர் முர்மு உத்தரவிட்டுள்ளார். இதில் எதிர்க்கட்சித் தலைவர்களின் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நடைமுறைக்கு கடும் அதிருப்தி தெரிவித்து, எதிர்க்கட்சி தலைவர்கள் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

அதில் கார்கேவும், ராகுல் காந்தியும் கூறியிருப்பதாவது:- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருக்கான தேர்வு நடைமுறையில் அடிப்படைக் குறைபாடு உள்ளது. இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒருமித்த மரபைப் புறக்கணித்து, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது தேர்வுக் குழுவின் நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
தலைவர் பதவிக்கு, அரசியல் சாசனத்தில் ஆழ்ந்த அறிவும், வலுவான பொறுப்பும் உள்ள சிறுபான்மை பார்சி இனத்தைச் சேர்ந்த நீதிபதி ரோஹின்டன் பாலி நாரிமன் மற்றும் தனிமனித சுதந்திரம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு தீர்ப்புகளை வழங்கிய சிறுபான்மை கிறிஸ்தவரான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஆகியோரை பரிந்துரை செய்தோம்.
உறுப்பினர் பதவிக்கு, சமூக நீதியை பாதுகாக்கும் முக்கிய தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி முரளிதர் மற்றும் சிறுபான்மை முஸ்லிம் நீதிபதி குரேஷி ஆகியோரை பரிந்துரை செய்தோம். எங்கள் பரிந்துரை ஏற்கப்படவில்லை. கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கும், கூட்டு முடிவை உறுதி செய்வதற்கும் பதிலாக, கூட்டத்தில் எழுப்பப்பட்ட நியாயமான கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்து, பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த வருத்தத்திற்குரியது. இவ்வாறு கூறியுள்ளனர்.