சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. அதிமுக கூட்டணி உடைந்து போகவில்லை. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மீதமுள்ள நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பல கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:-

அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதன்படி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களில் உள்ள கட்சி அமைப்பு மாவட்ட நிர்வாகிகளுடன் 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆலோசனை நடத்தப்படும்.
ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கடலூர், நாமக்கல், ஈரோடு மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை நடத்தப்படும்.
மேலும், வரும் 30-ம் தேதி காலை 9.30 மணிக்கு திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டச் செயலர்களுடனும், மாலை 3.30 மணிக்கு சென்னை, திருவள்ளூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டச் செயலர்களுடனும் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.