மதுரை: மதுரையில் நடக்கும் த.வெ.க. மாநாட்டில் 10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. இந்த மாநாடு மிகவும் பிரமாண்டமாக அமையும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 25-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக மதுரை பெருங்குடி அருகே பாரைப் பத்தி பகுதியில் சுமார் 506 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு பந்தல் மற்றும் மேடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த 16-ந்தேதி கால்கோள் விழா நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாநாட்டு பந்தல் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக ஜே.சி.பி. உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மாநாட்டு பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பகுதிகளும் சரி செய்யப்பட்டு பந்தல் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான ராட்சத குழாய்கள், இரும்பு தடுப்புகள், ஷீட்டுகள் போன்றவை அந்த பகுதிக்கு கனரக வாகனங்களில் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.
அடுத்த வாரம் முதல் பந்தல் அமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. இதற்காக த.வெ.க. மாநில பொதுச் செயலாளர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் அடுத்த வாரம் முதல் மதுரையில் முகாமிட்டு மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்திடாத அளவிற்கு இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு மேடை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் அமைய உள்ளது. இதற்கான அதில் தனித்துவம் மிக்க வல்லுனர்கள் நியமிக்கப்பட்டு மேடை உருவாக்குவதற்கு தேவையான வரைபடம் மற்றும் தொழில் நுட்பங்களை செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் சுமார் 10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இரும்பு போஸ்டுகள், ராட்சத கிரேன் மூலம் நடப்படுகிறது. மற்றும் அதற்கான வெல்டிங் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. மாநாட்டு பந்தலில் சுமார் 10 லட்சம் நாற்காலிகள் போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தவிர சிறப்பு அழைப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளும் அமருவதற்கான தனியாக இருக்கை வசதியும் செய்யப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சுடச்சுட அறுசுவை உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய தேவையான அனைத்து பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. உணவு தயாரிக்க சிறப்பு குழுவினர் பணியமர்த்தப்படுகிறார்கள். இதுதவிர சாப்பாடு கூடம், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்வதற்கு தனித் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் பணிகளை தொடங்கியுள்ளனர்.