சென்னை: மக்களிடம் மகிழ்ச்சியை காண்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். எதற்காக தெரியுங்களா?
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் களத்தில் பணியாற்றுகின்ற உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவுஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான என் அன்பு வேண்டுகோள்:
2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளன. செல்லும் இடம் எங்கும் கழக உடன்பிறப்புகளின் எழுச்சியைக் காண்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடம் மகிழ்ச்சியைக் காண்கிறேன். ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்குத் தந்திருக்கக் கூடிய பயனும், தொடரவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நாம் நிறைவேற்றவிருக்கும் சாதனைத் திட்டங்களின் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அனைத்து தொகுதிகளிலும் வெளிப்படுகிறது.
உடன்பிறப்புகளான உங்களின் உழைப்பின் மீது உள்ள நம்பிக்கையில் உறுதியுடன் சொல்கிறேன், இந்த தேர்தல் களத்தில் நாம்தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். இதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டு பெண்கள் முகத்தில் வெளிப்படும் மலர்ச்சியும், இளைஞர்களின் மனதில் உள்ள நம்பிக்கையும், சிறுபான்மைச் சமுதாயத்தினர் உள்ளிட்ட அனைத்து மக்களின் ஆதரவும் நமது வெற்றிக்கு அடித்தளமாக உள்ளன. வாக்குப்பதிவு நாளில் அதை வெற்றியாகக் கட்டி எழுப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி என நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார். அதைத்தான் உங்களில் ஒருவனான நானும் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியம். ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்பதை உறுதி செய்யும் உழைப்பை உடன்பிறப்புகள் வழங்கினால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிதான். அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.