திருச்சி: ஒரு நாளும் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். 4 முனை போட்டியில்லை. இங்கு இருமுனை போட்டி மட்டும் தான் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:
இந்த தேர்தலில் திமுக ஏலத்தில் எடுத்துள்ள கள்ளப்பெட்டி கூட்டணி, கள்ளக்கூட்டணி சேர்ந்து விஜயை எதிர்க்கின்றனர். உங்களுக்கும் எனக்கும் உள்ள பூர்வஜென்ம பந்தம் இன்னும் நெருக்கமாகி விடுவோம் என நினைத்து ஜனநாயகனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உங்களைப்போன்று எனக்கும் நியாயம் கேட்டு தான் உங்களை நோக்கி வந்துள்ளேன். திமுகவையும் நம்பாதீர்கள் பாஜகவையும் நம்பாதீர்கள். இருவரும் வேறு வேறு இல்லை.
ஏப்.23-ல் காலையில் பக்காவாக ரெடியாகிவிட்டு பூத்திற்கு சென்று விசில்சின்னத்தின் பட்டனில் ஒரு அழுத்து அழுத்துங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல், ஒரு மாற்றத்திற்கான தேர்தல், அனைத்தையும் துறந்து உங்களுக்காக வந்துள்ளேன். ஒரு நாளும் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். 4 முனை போட்டியில்லை. இங்கு இருமுனை போட்டி மட்டும் தான்.
இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும், வாக்களிக்க மறக்காதீர்கள். தவெக-விற்கு வாக்களியுங்கள். தமிழ்நாடு சிறப்பாக இருக்கும். 100 சதவீத நியாயமான ஆட்சியை கொடுப்போம். 100 சதவீதம் இந்த விஜய்யை நீங்கள் நம்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.