சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:- வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஆஞ்சியோகிராம் பரிசோதனை முடிவுகள் எனது இதயம் வலுவாக இருப்பதை உறுதி செய்துள்ளது. நான் நன்றாக இருக்கிறேன். இன்னும் 30 வருடங்களாவது மோடி அணியில் இருப்போம். தேஜா கூட்டணியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக ஒரே குறிக்கோளுடன் செயல்படுகிறோம்.

தற்போது தேஜா கூட்டணியில் அமமுக நீடிக்கிறது. அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு அமமுகவின் கதி என்ன, ஓபிஎஸ் கைவிடப்பட்டாரா என்பது எல்லாம் வெறும் யூகங்கள். ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார். மோடியின் கரங்களை வலுப்படுத்த அனைவரும் அந்த கூட்டணிக்கு சென்றோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம்.
ஒருங்கிணைந்த அதிமுக அமைய வாய்ப்பே இல்லை. அது நடக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை சிலருக்கு இல்லை. எனவே, ஒன்றுபட வேண்டும் என்று கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.