சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிப்.25 முதல் மார்ச் 1-ம் தேதி வரை அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பொதுக்கூட்டம் நடத்துகிறது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்வரின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சி செயல்படும் மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பிப்., 25 முதல் மார்ச் 1 வரை 5 நாட்கள், ’77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்’ நடக்கிறது.
பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களின் பட்டியல் மற்றும் அதில் கலந்துகொள்ளும் பேச்சாளர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1-ம் தேதி தேனியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறேன். அவர்களுடன், கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கட்சி சார்ந்த அணிகளின் துணை நிர்வாகிகளும், அந்தந்த தொகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை கட்சி சார்ந்த அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் மற்றும் தற்போதைய பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள், சிறப்புப் பேச்சாளர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.