சென்னை: கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண்ணை வெட்டியதால் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் ஆகியோர் மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்க இயக்குனரகம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன், கூடுதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். அதன்படி அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
பொன்முடி அமைச்சராக இருப்பதால் அடுத்த கட்ட விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது அமலாக்க இயக்குனரகம் பதிலளிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர், ஜாமீன் மனு தாக்கல் செய்ய வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.