சென்னை: முதல்வர் தலைமையில் ஆலோசனை… சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதாவது நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் தொடங்கும் நிலையில் அதனை முன்னிட்டு இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நாளை எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக எம்பிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, நிதிப்பகிர்வு, மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் முதலமைச்சரின் அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக துணை நின்று, நாடாளுமன்றத்திலும் இவற்றை முன்வைத்து போராடி வெற்றியை ஈட்ட வேண்டும்.
மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண வேண்டும். தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாம்.