திண்டுக்கல்: கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்ததற்கு யார் காரணம்? செந்தில் பாலாஜி தான் என்பது நாட்டிற்கே தெரியும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இது அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அணிகளின் புதிய மாநிலத் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நிர்வாகிகள் பழனியில் கிரேன் மூலம் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணியின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடு, எதிர்காலத்தில் அணி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொதுமக்களை சந்தித்து செய்ய வேண்டிய கட்சி பணிகள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பாஜக அணிகளின் மாநில தலைவர் கே.டி ராகவன், விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசும்போது, ”ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு மேல் தேசிய ஜனநாயக கட்சியினுடைய ஆட்சி வந்து விடும். கூட்டணி குறித்து ஜனவரி 10 ஆம் தேதிக்கு மேல் அனைத்தும் முடிவு செய்யப்படும். கூட்டணியில் விசிகவிற்கும், திமுகவுக்கும் விரிசல் உள்ளது. காங்கிரஸ் அந்த கூட்டணியில் தொடருமா? என்று தெரியவில்லை.
ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை எதுவும் செய்யவில்லை. அவரது மகனை துணை முதல்வர் ஆக்கியுள்ளார். ஆட்சி மாற்றம் வந்த பின் அனைத்துக்கும் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் முதல்வர் தருகிறார். சாதாரணமாக இறக்கும் மக்களுக்கு 2 லட்சம் தான் தரப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்ததற்கு யார் காரணம்? கரூர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்பது நாட்டிற்கே தெரியும்.” என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.
இதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ” தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா யாரை சொல்கிறாரோ அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று சொன்ன டிடிவி தினகரன் தற்போது மாற்றி பேசுகிறார் என்றால் நீங்கள் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவது குறித்து கேட்கிறீர்கள். முதலில் தீர்ப்பு வரட்டும்” என்று தெரிவித்தார்.