சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. தவெக கடந்த ஆண்டு பிப்., 2-ல் துவக்கப்பட்டது.
கட்சிக்கு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் மட்டுமே இருந்தனர். பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதேபோல், அரசு நிர்வாகத்தில் பல்வேறு பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில், தவெகவின் நிர்வாக வசதி கருதி, சட்டசபை தொகுதிகள் உட்பட மொத்தம் 120 மாவட்டங்களாக கட்சி அமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட கழக இணைச் செயலாளர்கள், பொருளாளர்கள், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.