சென்னை: கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட அன்றே தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்தார். இதையடுத்து ஒரு கோடிக்கும் அதிகமானோர் தவெகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தவெகவின் முதல் மாநில மாநாடு நடந்தது. விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. மாநாட்டில், அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் குறித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சியில் நிர்வாகிகள் நியமனம் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி கட்சி 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். வி.கே.சி., அ.தி.மு.க.,வில் இருந்து தவெக கட்சியில் இணைந்த நிர்மல்குமாருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சி துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று 2-ம் ஆண்டு பதவியேற்பு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், தவெக கொள்கை தலைவர் வேலுநாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜ், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனை இன்று காலை 10 மணிக்கு விஜய் திறந்து வைத்து கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.
அதன்பின், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முக்கிய நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.