சென்னை: பயண ஆவணங்கள் இல்லாத இலங்கைத் தமிழர்களுக்கு கருணை அடிப்படையில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது X வலைத்தளத்தில் கூறியதாவது:- இலங்கையில் நீண்டகாலமாக நடந்து வரும் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பித்து ஜனவரி 9, 2015-க்கு முன்பு நம் நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட், விசாக்கள் மற்றும் பிற பயண ஆவணங்கள் இல்லையென்றால், நமது நாட்டின் சட்டங்களின்படி கருணை அடிப்படையில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கான முதல் படி இது என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது நமது நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களின் நீண்டகால கோரிக்கையாகும்.
இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக இலங்கைத் தமிழர்கள் சார்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம், இது தமிழ் மக்களின் மீதான அக்கறையின் வெளிப்பாடாகும். இவவறு அதில் கூறப்பட்டுள்ளது.