கோபி: பவானி ஆற்றங்கரை ஓரத்தில் எந்த காலத்திலும் சாய ஆலை வராது என்று விவசாயிகளிடம் செங்கோட்டையன் உறுதி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளயைம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சியானது பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமமாகும். இங்கு மட்டும் பவானி ஆற்றை நம்பி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது.
பவானி ஆற்றின் அருகே தனியார் ஒருவர் சாய தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சாய தொழிற்சாலை அமைக்கப்பட்டால் சாய கழிவு ஆற்றில் கலந்து பவானி ஆறு, நொய்யல் ஆறு போன்று மாசுபடுவதுடன், பவானி ஆற்றை நம்பி உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் உள்ளிட்ட பாசன பகுதியில் உள்ள 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும், பவானி ஆற்றில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் பாழாகும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பவானி ஆற்றங்கரையோரம் சாய சலவை ஆலை அமைக்க அனுமதி அளித்ததை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசினார்.
இதற்கு, சாயசலவை ஆலைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசால் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இவ்விவகாரத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்து அரசை அணுகி பெரும் முயற்சியையும் உதவியையும் செய்ததற்காக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோபிச்செட்டி பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை இன்று சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது, அரசு ஆலைக்கு தடை விதிக்கும் போது ஆலை உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அரசின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இது அனைவரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. எனது தனிப்பட்டது அல்ல.
இந்த பகுதியில் விவசாயிகள் குடிநீர் பிரச்சனை இருக்கக்கூடாது என மக்களில் ஒருவராக இருந்து இந்த பணியை செய்கிறேன். பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. கால்நடைகள் தண்ணீர் குடிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் இந்த ஆலை வராமல் இருக்க உங்களுடன் இருந்து பணியாற்றுவேன்.
பவானி ஆற்றங்கரையோரத்தில் எந்த காலத்தில் சாய ஆலை வராது. இனி பவானி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் முயற்சி தான் வெற்றி பெற்றுள்ளது. 15.65 லட்சம் லிட்டர் தேவைப்படும் நிலையில் இங்கு வரும் ஆலை பெருந்துறை சிப்காட்டிற்கு செல்லலாம் என்றார்.