ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது பிடிபி-பாஜக தலைமையிலான கூட்டணி அரசு தாக்கல் செய்த கடைசி பட்ஜெட் 2018.
அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவு 2019 இல் அமல்படுத்தப்பட்டது. அதன்பின், நீண்ட நாட்களாக தேர்தல் நடத்தாமல் இருந்த நிலையில், 2024-ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு துறைகளில் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை பாராட்டினார். இந்த பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ. 815 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.390.20 கோடி, 2.88 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.