சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில், இறுதிகட்ட ஏற்பாடுகளை தேர்வுத்துறை முடுக்கிவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. பிளஸ் 2-வில் 8.21 லட்சம் பேர், பிளஸ் 1-ல் 8.23 லட்சம் பேர், 10-ம் வகுப்பில் 9.13 லட்சம் பேர் என மொத்தம் 25.57 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 3,316 மையங்களும், பத்தாம் வகுப்புக்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கண்காணிப்பாளர்கள் பணியில், 48,426 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல், பிளஸ் 1 தேர்வுக்கு 44,236 பேரும், பிளஸ் 2 தேர்வுக்கு 43,446 பேரும் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முறைகேடுகளைத் தடுக்க பத்தாம் வகுப்புக்கு 4,858 நிலையான மற்றும் பறக்கும் படைகளும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 4,470 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான இறுதி சரிபார்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதன்மை மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாநிலம் முழுவதும் சுமார் 300 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் வசதிக்காக கடந்த ஆண்டை விட தேர்வு மையங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தேர்வு முடிந்ததும் தேர்வு முடிவுகள் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் 150 முகாம்கள் அமைக்கப்படும் என அறிவித்தனர்.