சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபேன் இந்தியாவில் 54-வது தேசிய பாதுகாப்பு தின விழா, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன். நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். பின்னர், அமைச்சர் பேசுகையில், “தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவது அவசியம். தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதி செய்வது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பணியிடத்தில் ஆபத்துக்களை தடுக்க சரியான திட்டமிடல் அவசியம். தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனைப் பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அறிவிப்பின்படி, பட்டாசு ஆலை விபத்துகளில் பெற்றோர் இருவரையும் இழக்கும் குழந்தைகளின் கல்விக்கு உதவ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாக உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பாதுகாப்பு என்பது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தின் கூட்டுப் பொறுப்பு என்பதால், விபத்தில்லா பணியிடத்தை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், என்றார். விழாவில் ‘தொழில்சார் வெப்ப அபாயங்கள்’ குறித்த கையேடு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செ.ஆனந்த் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.