சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லக்கண்ணு, நேற்று முன்தினம் வீட்டில் விழுந்து தலையில் காயம் அடைந்ததால் சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர் குணமடைந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், நூறு வயதுக்கு மேற்பட்ட அவருக்கு, முதுமை காரணமாக உடலில் ஏற்பட்ட வேறு சில பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க, நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதயநோய் நிபுணர் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. அங்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் மேற்பார்வையில் உள்ளார். இந்த சூழ்நிலையில், நல்லக்கண்ணுவின் உடல்நிலை குறித்து அமைச்சர் கூறுகையில், “ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் உள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு, அவரது உறவினர்களை அடையாளம் காண முடிந்தது.
உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு மீண்டும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டன. எனவே, அவருக்கு மீண்டும் செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவிக்க தனி மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.