கோவை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் 2024 டிசம்பர் 21 மற்றும் 22 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். கோவை மாநகரப் பகுதியில் உள்ள மக்கள் தங்களுடைய வரிகளை கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அல்லது தங்களது மண்டல அலுவலகங்களில் செலுத்த முடியும்.

மாநகராட்சி சார்பில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் போன்ற வரிகளை அவ்வப்போது சிறப்பு முகாம்கள் மூலம் வசூலிக்கப்படுகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்திற்கு ஒருமுறை மற்றும் குடிநீர் கட்டணம் இரு மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது.
மேலும், 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சியின் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை பொதுமக்கள் செலுத்த ஏதுவாக சிறப்பு வரி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அரசு விடுமுறை நாட்களை தவிர) நடைபெறும்.
இந்த சிறப்பு முகாம்கள் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். முகாம் நடைபெறும் இடங்கள்: வார்டு எண் 7 மற்றும் 8-க்கு நேரு நகர் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள காளப்பட்டி, வார்டு எண் 35-க்கு கற்பக விநாயகர் கோவில் தேவாங்க வீதி, இடையர்பாளையத்திலும் (21 ஆம் தேதி மட்டும்), வார்டு எண் 75-க்கு மாரியம்மன் கோவில் மைதானம், நேதாஜி ரோடு, சீரநாயக்கன் பாளையத்திலும் (22 ஆம் தேதி மட்டும்), வார்டு எண் 11-க்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ஜனதா நகரிலும், வார்டு எண் 88-க்கு தர்மராஜா கோவில் மண்டபம், குனியமுத்தூரில், வார்டு எண் 89-க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office), சுண்டக்காமுத்தூரிலும், வார்டு எண் 32-க்கு சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூரிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இவ்வாறு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (21 மற்றும் 22 ஆகிய நாட்களில்) அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் வழக்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களுக்கான வரிகளை சரியான முறையில் செலுத்தி, இந்த சிறப்பு முகாமின் பயனை பெற்றுக் கொள்ளலாம்.