சென்னை: சிவாஜியின் பேரன் துஷின் பங்குதாரராக உள்ள தயாரிப்பு நிறுவனம் வாங்கிய கடனுக்காக அன்னையின் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அன்னையின் வீடு தனக்கு சொந்தமானது என்பதால், அந்த வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் துஷ்யந்தின் தந்தை ராம்குமார், அன்னையின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் பிரபு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அன்னை இல்லம் வீட்டின் ஒரே உரிமையாளர் பிரபு என்றும், ராம்குமாருக்கும் வீட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினார். அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் முன்பே நடிகர் பிரபுவுக்கு நடிகர் சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்திருந்ததாகவும், அதன் அடிப்படையில்தான் பத்திரம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனவே, வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வாதங்களை எதிர்த்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோடி ரூபாய் மதிப்பிலான அன்னை இல்லத்தில் ராம்குமார் உரிமையை விட்டுக் கொடுத்ததை நம்ப முடியாது என்றும், நடிகர் பிரபுவுக்கு சொத்தில் உரிமை உள்ளதா என்பதை முழு விசாரணைக்கு பிறகே தீர்மானிக்க முடியும் என்பதால் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.