
சென்னை: தமிழகத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 9,150 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள், இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் கட்டத்திற்கு விற்று, தங்கள் தேவைக்கும் பயன்படுத்துகின்றன. காற்றாலை சீசன் மே முதல் செப்டம்பர் வரை ஆகும்.
இந்தக் காலக்கட்டத்தில் தினமும் சராசரியாக 80 மில்லியன் முதல் 100 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த அக்டோபரில் இருந்து காற்றின் வேகம் குறைந்துள்ளதால், காற்றாலைகளில் இருந்து தினமும் 10 மில்லியன் யூனிட் மின்சாரம் கூட கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் வீசிய ஃபென்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றாலைகளில் இருந்து அதிக அளவில் மின்சாரம் கிடைக்கிறது. அதன்படி, கடந்த 30ம் தேதி 30 மில்லியன் யூனிட், டிசம்பர் 1-ம் தேதி 5.56 மில்லியன் யூனிட், 2-ம் தேதி 5.88 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளது.
இதனால் காற்றாலை நடத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் மின் விநியோக நிறுவனம் அனல் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதலை குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.