அபராதம் விதிக்கும் வகையில் சட்டவிரோத வாகனங்களை பிடிக்க சென்னையில் 200 இடங்களில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 200 கேமராக்களை பொருத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். விபத்து மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், வேகமான போக்குவரத்தை உறுதி செய்யவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, விதிமீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், சாலை சந்திப்புகளில் நின்று அபராதம் விதித்து வந்த போக்குவரத்து போலீசார், தற்போது பல்வேறு இடங்களில் நவீன கேமராக்களை பொருத்தி, அதில் பதிவான காட்சிகளை வைத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம் தொடர்பான தகவல்கள், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தானியங்கி கேமராக்கள், சட்டவிரோதமாக வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு, அபராதமும் விதிக்கின்றன. வாகன ஓட்டிகளின் சந்தேகங்களை தீர்க்க, விதிமீறல் தொடர்பான புகைப்படங்களும் அனுப்பப்படுகின்றன. அடுத்தகட்டமாக, அபராதம் விதிக்கும் முறையில் AI தொழில்நுட்பத்தையும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் ஈவிஆர் சாலை, அண்ணாசாலை, மின்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200 கேமராக்களில் ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக சென்னையில் மேலும் 200 கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் செய்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சாலையின் பல்வேறு பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் உட்பட பல்வேறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட காட்சிகள் மூலம் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதி மீறல்களை புகைப்படம் எடுத்து வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி வருகிறோம். AI தொழில்நுட்பம் மூலம் அதன் துல்லியம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் தப்ப முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விதி மீறல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற எண்ணம் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும். வாகன ஓட்டிகளும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து சாலை விதிகளை மீறாமல் நடந்து கொள்வார்கள். இதனால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் வெகுவாக குறையும், என்றனர். இது தவிர, சில ரேடார் பொருத்தப்பட்ட வாகனங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் 360 டிகிரி சுழலும் மற்றும் படங்களை எடுக்கும் கேமராக்களும் உள்ளன.
இந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட ரேடார் வாகனங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலை சந்திப்புகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கமெராக்கள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் கண்டு படம் பிடித்து, அவற்றின் மூலம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.