சென்னை: விமானப்படையின் 92ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி நடந்தது.
21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வான்பரப்பில் நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் விமானப்படையின் 72 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சாகசம் செய்தன. வான் சாகசங்களை நேரில் காண ஏராளமான மக்கள் ஆர்வமுடன் குவிந்துள்ளனர்.
குடைகளை பிடித்தபடி குடும்பத்துடன் மெரினாவிற்கு மக்கள் வருகை தந்தனர். விமானப்படையின் வலிமையை பறை சாற்றும் நிகழ்ச்சியாக இது அமைந்தது.
ஆகாச கங்கை குழு பிணைக்கைதிகளை மீட்பது போல் செய்து காட்டினர். பாராசூட் உதவியுடன் விமானங்களில் இருந்து குதித்த ஆகாச கங்கை குழு சாகசம் செய்தனர். 200 கி.மீ. வேகத்தில் வானில் இருந்து தரையை நோக்கி வந்த ஆகாச கங்கை பாராசூட் குழுவினரை கண்டு மக்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
பிணைக்கைதிகளை கமாண்டோக்கள் மீட்பது போல் செய்து காட்டினர். எம்.ஐ.-17 வி5 ரக ஹெலிகாப்டர்களில் இருந்து கயிறு மூலம் வீரர்கள் தரையிறங்கினர். விமானப்படை வீரர்களின் தீரத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.