மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரையில் பேசியதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசினார். அமித் ஷாவின் பேச்சு பொய், வஞ்சகம் மற்றும் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது என கூறிய ஆ.ராசா, அவர் ஒரு மாநிலத்திற்கு வரும்போது உள்ள பொறுப்பு உணர்வே இல்லாமல் செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.
அமித் ஷாவின் பேச்சு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருந்ததாகவும், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதை பொறுக்க முடியாமல் பாஜக இங்கு தவறான அரசியல் நடத்த முயற்சிப்பதாகவும் கூறினார். அவர் பேச்சு தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, உள்துறை அமைச்சராகவும் ஏற்க முடியாதது என்றும் ராசா தெரிவித்தார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக விவாதிக்க அமித் ஷா தயார் தானா என சவால் விடுத்த ஆ.ராசா, “டெல்லி, சென்னை, புவனேஸ்வர் எங்கு வேண்டுமானாலும் வாருங்கள், நான் தயாராக இருக்கிறேன்” என்றார். ஆனால் இந்தியில் மட்டும் பேச வேண்டாம் எனச் சிரித்தபடி கூறினார். திமுக வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றப்பட்டதாகவும், ஓய்வூதியத் திட்டம் மட்டும் செயல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் கூறினார்.
மோடியும் அமித் ஷாவும் தமிழகத்தில் பயமுறுத்த முடியவில்லை எனவும், அவர்களைப் பார்த்து சிரிப்பே வருகிறது என்றும் ராசா குறிப்பிட்டார். தென்னகத்தின் ஆதரவு இல்லாமல் பாஜக நாடாளுமன்றத்தில் சட்டங்களை கொண்டு வர முடியாததால் தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்படுகிறது என்றும், அதை முதல்வர் ஸ்டாலின் முறியடித்துவிட்டதாகவும் கூறினார்.
மதுரையில் முருகன் மாநாடு நடத்தப்படும் நோக்கம் மதவாதத்தையும் பிளவையும் தூண்டுவதாக ராசா விமர்சித்தார். கீழடி அகழாய்வின் அறிக்கையை நிராகரிக்கக்கூடிய காரணமின்றி திரும்பத் திரும்ப தள்ளுவது, தமிழரின் கலாச்சாரத்தை அங்கீகரிக்க விரும்பாத மத்திய அரசின் நோக்கத்தை காட்டுகிறது என்றார். தமிழ், திராவிடம் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படுகிறதற்காக பாஜக 2026ல் மக்கள் தண்டனை அளிப்பார்கள் எனவும் ஆ.ராசா உறுதியாக தெரிவித்தார்.