
சென்னை: ”மழை மற்றும் வெள்ளத்தால் வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்; தேவைப்பட்டால், கூடுதல் மீட்புக் குழுக்களை அந்தப் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்;-
“வங்கக் கடலில் உருவான ஃபென்சல் புயல் எதிர்பார்த்த வேகத்தில் கரையைக் கடக்காமல், பல மணி நேரம் ஒரே இடத்தில் நிலைகொண்டதால், தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பெய்தது. கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக கூறப்படும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணி நேரத்தில் 50 செ.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ மழையும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தலில் 32 செ.மீ மழையும், மாதம்பூண்டியில் 31 செ.மீ மழையும், சேலம் ஏற்காட்டில் 24 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் பெருவெள்ளம் போல் பெய்த மழையின் தீவிரம் காரணமாக பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் ஏரி போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. சேலத்தில் சரபங்கா ஆற்றிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் கடலூர் வரையிலான தென்பெண்ணை ஆற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமங்களில் தண்ணீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரலாறு காணாத மழை பெய்துள்ளது உண்மைதான் என்றாலும், இயற்கையாகவே கையாளும் திறன் கொண்ட கட்டமைப்புகள் இருந்தும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் ஆறுகளுக்கு செல்லும் ஏரி, குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள் தூர்வாரப்படாததே இதற்குக் காரணம். தூர்வாரும் பணிக்காக ஆண்டுதோறும் அரசு ஒதுக்கும் நிதி எங்கே போனது என்பது யாருக்கும் தெரியவில்லை. பல இடங்களில், கால்வாய்களில் வழிந்தோட வேண்டிய மழைநீர், சாலைகளிலும், தெருக்களிலும் ஓடுவதால், அதிகளவில் சேதம் ஏற்படுவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அலட்சியம் மற்றும் திறமையின்மையால் பேரழிவை ஏற்படுத்திய தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளை வழங்குவதில் படுதோல்வி அடைந்துள்ளது. திருவண்ணாமலையில் பாறைகள் சரிந்து விழுந்ததில் வீடுகளுக்குள் சிக்கிய 7 பேர் 18 மணி நேரமாகியும் மீட்கப்படவில்லை. பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இதுபற்றி முதல்வர் கவலைப்படவில்லை. மழை மற்றும் வெள்ளத்தால் வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லா இடங்களிலும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்; தேவைப்பட்டால், கூடுதல் மீட்புக் குழுக்களை அந்தப் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரையும் உயிருடன் மீட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.