சென்னை: அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் 2025-26-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் மாணவர்களை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான மாணவர்களே 1.5 லட்சம் பேர் மட்டுமே அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதி துவங்கியது. இதுவரை 55 நாட்கள் ஆன நிலையில், 5 லட்சம் மாணவர்கள் என்ற இலக்கை எட்டியிருக்க வேண்டும். தகுதியான மாணவர்கள் அனைவரும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு விட்டதால், இனி யாரும் அரசுப் பள்ளிகளில் சேர வாய்ப்பில்லை என்றும், வரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறையும் என்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் 31,336 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகள் அனைத்திலும் 1.50 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்றால், சராசரியாக ஒரு பள்ளிக்கு 4.78 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்று அர்த்தம். ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் சேர 5 மாணவர்கள் கூடத் தயாராக இல்லை என்றால், அரசுப் பள்ளிகள் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையில் செயல்படும் 31,336 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 25.50 லட்சம் மட்டுமே. அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 81 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அதே சமயம் தமிழகத்தில் உள்ள 4498 தனியார் பள்ளிகளில் 30.60 லட்சம் மாணவர்கள் அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 680 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த புள்ளி விவரங்கள் அரசு பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறது. அரசுப் பள்ளிகளில் சேர மாணவர்கள் முன்வராததற்குக் காரணம், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், போதிய ஆசிரியர்கள் இல்லாததும்தான்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பல பள்ளிகளில் மேற்கூரை பூச்சு போடுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. அதேபோல் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது, ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.46 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 3 அல்லது 4 ஆசிரியர்கள் மட்டுமே இருந்தால், தரமான கல்வியை எப்படி வழங்க முடியும்?
எனவே, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதன் மூலம் அதிக அளவில் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேருவதை உறுதி செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.