மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 18,799 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்ப ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு அறிவிப்பை வெளியிட்டது. இதில், தெற்கு ரயில்வேயில் 726 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்கட்ட கணினி வழித் தேர்வு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட கணினி வழித் தேர்வு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும், தமிழக தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகில் தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளதாவது, ‘இரண்டாம் கட்ட தேர்வு ஒரே நேரத்தில் ஒரே பொது வினாத்தாளுடன் நடத்தப்படுகிறது.

இதன் காரணமாக, தேர்வு எழுதுபவர்களுக்கு அவரவர் மாநிலத்திலேயே முடிந்த அளவு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சொந்த மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்க முடியாத நிலையில், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை நடைபெற்ற இரண்டாம் கட்ட கணினி வழித் தேர்வுகளிலும் இதே ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டது.
இந்தத் தேர்வுகளில் பங்கேற்கும் தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரயில்களில் இலவச பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.