சென்னை: ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிந்து கொண்டால், நீங்கள் மாறுவதோடு, நேர்மறை சக்திகளையும் எண்ணங்களையும் உங்கள் குடும்பத்தில் ஏற்படுத்த முனைந்து, உங்கள் குழந்தைகளையும் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வளர்க்கும் சூழலை ஏற்படுத்துவீர்கள்.
மன வருத்தம்: ஒருவர் நம்மை தொடச்சியாகத் திட்டுவதாக எண்ணிக்கொள்ளுங்கள். அப்போது நம் மனம் சுக்கல் சுக்கலாக உடைந்துவிடும். இது எதார்த்தமான உண்மை தானே. உங்கள் குழந்தையை நீங்கள் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்கும்போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதிகம் வருத்தம் கொண்ட மனதோடு இருப்பதால் அவர்கள் எப்போதும் சோர்ந்தே காணப் படுவார்கள். இது அவர்களது வளர்ச்சியையும், வயதிற்கு ஏற்ற அறிவையும் பாதிக்கும். மன வருத்தமே பல கடுமையான நோய்களுக்கும் முதல் படி என்பதை தயவு செய்து நினைவு கூறுங்கள். இது எதிர்காலத்தில் தற்கொலை எண்ணத்தைக் கூடத் தூண்டிவிடும்.
உற்சாகமின்மை: உங்கள் குழந்தையின் உற்சாகம் குறையத் தொடங்கும். நாம் செய்வது சரியா தவறா என்று புரியாமல் குழப்ப நிலைக்குத் தள்ளப்படுவர். நம் அப்பா அல்லது அம்மா எதற்காகத் திட்டுவார்கள் என்று கூட யூகிக்கத் தெரியாமல் தவிக்கத் தொடங்குவர். நாளடைவில் அவர்களுக்கு எதுவும் செய்ய உற்சாகம் இல்லாமல் போய் விடும். படிப்படியாக மந்தநிலை அடைவர். எந்த விசயத்திலும் நாட்டம் இருக்காது. சமவயதில் உள்ள மற்ற பிள்ளைகளுடன் பேச மாட்டார்கள், கூடி விளையாட மாட்டார்கள். சில நாட்களிலே தனி உலகத்தில் முடங்கி விடுவர். இந்த நிலை நம் பிள்ளைகளுக்கு வர நாம் அனுமதிக்கக் கூடாது.
பாதுகாப்பற்ற உணர்வு: ஒரு குழந்தை தனக்கு அம்மா அப்பா இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு தான் இந்த உலகத்தில் ஜனித்து வாழத் தொடங்குகிறது. அப்படி இருக்கும் போது, அவர்களே தங்களைத் தொடர்ந்து திட்டிக் கொண்டு இருந்தால், எப்படி அவர்கள் உங்களிடமிருந்து ஒரு பாதுகாப்பான உணர்வைப் பெறுவார்கள்? குழந்தைகளுக்கு மனதளவில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது பெற்றோர்களின் முக்கிய பங்காகும்.
பொய் சொல்லத் தொடங்குவது: இது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம். தம் பெற்றோர்களிடமிருந்து திட்டு வாங்காமல் இருக்க, தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவற்றை மறைக்க அவர்களிடம் சிறு சிறு பொய்களைக் குழந்தைகள் சொல்லத் தொடங்கி விடுவார்கள். இதற்கு முழு காரணமும் எப்போதும் அச்சுறுத்தும் வகையில் பெற்றோர்கள் நடப்பதுவே ஆகும். உங்கள் குழந்தைகளுடன் நல்ல நண்பனாகத் தோழமையோடு இருக்கப் பழகுங்கள். அப்போது மட்டுமே அவர்கள் எந்த பிரச்சனையையும் மனம் விட்டுப் பேசுவார்கள். அவர்களுக்கு அந்த நம்பிக்கையை நாம் தருவது முக்கியம்.
பெற்றோர்கள் மீது பயம்: ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் எந்த இடத்திலும் பயம் இல்லாமல் இருப்பதுவே ஆரோக்கியமான சூழல். ஆனால் இன்றைய கால கட்டத்தில் குழந்தை தன் சொந்த வீட்டிலேயே அச்சத்தோடுதான் வளருகின்றது. இது முற்றிலும் கசப்பான உண்மை. அதிக பயம் அவர்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்வதோடு அவர்களை வாழ்க்கையில் தவறான பாதையில் செல்லவும் தூண்டிவிடுகிறது.