தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். கைலாசநாதர் குகை, பூதநாராயணன் கோயில் மற்றும் ஆதி அண்ணாமலையார் கோயிலைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் சுருளி அருவிக்கு வருகிறார்கள். சுருளி அருவிக்கு ஹைவேஸ் துவானம் அணையிலிருந்தும், ஈத்தக்காடு மற்றும் அரிசிப்பாறை பகுதிகளில் இருந்தும் தண்ணீர் வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு முதல் பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்று காலை வரை குறையாததால், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக இன்று அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை அருவியில் நீர்வரத்து குறையாததால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அருவியில் குளிப்பதை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருவியில் நீர்வரத்து சீரானவுடன் மீண்டும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.