சென்னை: வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தமிழக அரசின் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்செட் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு சென்னை திருவான்மியூரில் வீடுகள் ஒதுக்கீடு செய்தார். விளம்பரம் இதில் முறைகேடு நடந்ததாக, அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சர் பெரியசாமி, ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாபர்செட், பர்வீன் உட்பட, 7 பேர் மீது, 2013-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கை ஏற்கனவே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீதான நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியசாமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணை நடந்தது.
அமைச்சர் பெரியசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ”இந்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பதவி வகித்தவர் மீது வழக்கு பதிவு செய்ய கவர்னர் மட்டுமே அனுமதி அளிக்கும் போது, சட்டப் பேரவைத் தலைவரிடம் அனுமதி பெறுவது சரியல்ல” என்று வாதிட்டார். இதையடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.